
ஸ்ரீராமகிருஷ்ணரின் தாய்மொழிப் பற்று
உண்மையைக் கடைப்பிடிக்கிறவர்கள், சொன்னபடி செய்வதில் மிகுந்த சிரத்தை காட்டுவார்கள்; பிறரிடமிருந்தும் இந்தச் சிரத்தையை எதிர்பார்ப்பார்கள். ஸ்ரீ ராமகிருஷ்ணர், சிறிய விஷயங்களில் கூட இந்தச் சிரத்தையைக் காட்டினார். ஏதாவது ஒரு காரியத்தைச் செய்வதாகச் சொல்லிவிட்டால் அதைச் செய்தே முடிப்பார். சொல்வதும் செய்வதும் ஒன்றாயிருக்கவேண்டு மென்பது இவர் கருத்து. உண்மை யென்பதும் இதுதானே? கூறுகிறார்:- ஒருவன் உண்மையைக் கடைப் பிடிக்காவிட்டால் அவன் எல்லாவற்றையும் இழந்து விடுகிறான். தோட்டத்திற்குப் போகிறேன் என்று அகமாத்தாக நான் சொல்லி விட்டேன் என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்படிப் போவதற்கு அவசியமில்லா விட்டால்கூட நான் போயே ஆகவேண்டும். அப்படிப் போகா விட்டால் நான் உண்மையினின்று பிறழ்ந்தவனாவேன். ஸ்ரீ ராம கிருஷ்ணருடைய உண்மை நெறி எவ்வளவு கடினமானது!
தன்னம்பிக்கை யுடையவர்கள், கடவுள் நம்பிக்கை யுடையவரா யிருப்பார்கள். இங்ஙனமே தன்னம்பிக்கையானது, கடவுளின் உண்மையிலே நம்பிக்கை கொள்ளும்படி செய்கிறது. கடவுளைக் காட்டுவீர்களா? என்று விவேகானந்தர் கேட்டபோது காட்டுவேன் என்றும், கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா? என்றபோது ஆம்; பார்த்திருக்கிறேன்; இப்பொழுதும் பார்க்கிறேன்; உன்னை இங்கே எப்படிப் பார்க்கிறேனோ அதைவிட அதிகமாகப் பார்க்கிறேன் என்றும் கூறினார் ஸ்ரீ ராமகிருஷ்ணர். இந்த உறுதியான வாசகந்தான், கடவுளின் உண்மையிலே கொண்டிருந்த இந்தத் திட நம்பிக்கைதான், விவேகானந்தரை இவரிடத்தில் ஈடுபடுத்தியது.
ஸ்ரீராமகிருஷ்ணர், தாய்மொழிப் பற்று நிரம்ப உடையவர். தம் எதிரில் தமக்குத் தெரியாத ஆங்கிலத்தில் யாராவது பேசுவார்க ளானால் அதை நாசூக்காகக் கண்டித்து விடுவார். ஒரு சமயம், வங்க இலக்கியத்திற்குப் புதியதொரு ஜீவகளையை ஏற்படுத்திக் கொடுத்த வரும், அரசாங்க உத்தியோகத்திலிருந்தவருமான பங்கிம் சந்திர சட்டர்ஜி, ஸ்ரீ ராமகிருஷ்ணரைத் தரிசிக்க முதன் முதலாக வந்தார். அவருடன் கூட வந்திருந்த நண்பர், இவர்தான் பங்கிம் என்று பங்கிம் சந்திரரை அறிமுகப் படுத்தி வைத்தார். ஸ்ரீ ராமகிருஷ்ணர், பங்கிம்! உங்களைக் கூனலாக்கி விட்டது, வளையச் செய்துவிட்டது எது? என்று சிரித்துக் கொண்டே கேட்டார். பங்கிம் என்றால் வங்க பாஷையில் கோணல் அல்லது வளைவு என்று அர்த்தம். பூட் தான் இந்தக் கோணலுக்குக் காரணம். நமது வெள்ளை எஜமானர் களுடைய பூட் உதைகள் என் உடம்பைக் கூனலாக்கி விட்டன என்றார் பங்கிம்சந்திரர். பின்னர் ஸ்ரீராமகிருஷ்ணர், கிருஷ்ணபகவான் ஏன் சியாமள வர்ணமாயிருக்கிறார் என்பதைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார். சொல்லி முடித்ததும், இவர் சொன்னதைப் பற்றி பங்கிம் சந்திரரும் அவருடைய நண்பரும் ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருந்தார்கள். என்ன, ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருக்கிறீர்களா? என்றார் ஸ்ரீராமகிருஷ்ணர். நீங்கள் இதுகாறும் சொன்னதைப் பற்றி ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருக்கிறோம் என்றார்கள் அவர்கள். ஸ்ரீராமகிருஷ்ணர் சிரித்துக் கொண்டே பின்வரும் கதையைக் கூறினார்:-
ஒரு சமயம் ஓர் அம்பட்டன் ஒரு பெரிய மனிதருக்கு க்ஷவரம் செய்து கொண்டிருந்தான். அப்படிச் செய்து கொண்டிருக்கிற போது, ஏதோ தவறுதலாக, அந்தப் பெரிய மனிதருடைய முகத்திலே காயம் பட்டுவிட்டது. பெரிய மனிதர், கோபமேலிட்டவராய் டாம் என்றார். அந்த அம்பட்டனுக்கோ இந்த ஆங்கில வார்த்தைக்கு அர்த்தம் தெரியவில்லை. தன் ஆயுதங்களைக் கீழே வைத்து விட்டான். மேற்கொண்டு க்ஷவரம் செய்யவில்லை. இப்பொழுது டாம் என்று சொன்னீர்களே, அதனுடைய அர்த்தம் என்ன? என்று கேட்டான். அந்தப் பெரிய மனிதர் வீணாகப் பேசாதே. அதற்கு அர்த்தமொன்றுமில்லை. கொஞ்சம் ஜாக்கிரதையாக க்ஷவரம் செய், அவ்வளவுதான் என்றார். அம்பட்டன் விடுகிற பெயர் வழியா யில்லை. டாம் என்ற வார்த்தைக்கு நல்ல அர்த்த மாயிருந்தால், நான் டாம், எங்கப்பா டாம், எங்கள் முன்னோர்களெல்லோரும் டாம்கள். ஆனால் அந்த வார்த்தைக்குக் கெட்ட அர்த்தமாயிருந்தால் நீங்கள் டாம், உங்களப்பா டாம், உங்கள் முன்னோர்களெல் லோரும் டாம், டாம், டாம் என்றான் அவன்,
ஒரு பாஷையைத் தெரியாதவர் முன்னிலையில் அந்தப் பாஷையில் பேசக் கூடா தென்றும், அப்படிப் பேசுவது மரியாதைக் குறைவு என்றும், நேரடியாகச் சொல்வதற்குப் பதிலாக இந்தக் கதையைச் சொல்லிக் காட்டினார் ஸ்ரீ ராமகிருஷ்ணர்.


