
ஏகாதசி மகிமை
அவந்தி நகரத்தின் எல்லைக்கப்பால் பிரஷ்டம் செய்யப்பட்ட சண்டாளன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவந்தி நகரைச் சுற்றி ஓடும் சிர்பா நதியின் கரையில் ஒரு விஷ்ணு ஆலயம் இருந்தது. இந்தச் சண்டாளன் மிகப் பெரிய விஷ்ணு பக்தன். ஏகாதசி அன்றைக்கு முழுப்பட்டினி இருந்து அன்று இரவு விஷ்ணு கோயிலுக்குச் சென்று மனமுருகிப் பாடும் பழக்கத்தை மேற்கொண்டிருந்தான். ஒருமுறை ஏகாதசி வழிபாட்டிற்குப் புறப்பட்ட அவன், நதிக்கரையில் இருந்த மரங்களில் பூப்பறிக்கத் துவங்கிய போது ஒரு சிக்கலில் அகப்பட்டுக் கொண்டான். அந்த மரத்தில் இருந்த பிரம்ம ராட்சதன், “நில், பசியால் துடிக் கின்றேன். உன்னைத் தின்னப் போகிறேன்” என்றான். அது கேட்ட சண்டாளன் சிறிதும் அச்சம் இல்லாமல் “நல்லது. உனக்கு உணவாவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் இப்பொழுதில்லை. 20 ஆண்டுக் காலமாக ஏகாதசி விரதம் இருந்து விஷ்ணு கோயிலுக்குச் சென்று வழிபட்டு வருகிறேன். இன்று ஏகாதசி. என்னை இப்பொழுது விட்டுவிட்டால் கோயிலுக்குச் சென்று வழிபட்டு விட்டு வந்து, நாளைக் காலை உனக்கு உணவாகிறேன்” என்று உறுதியோடு கூறினான் சண்டாளன். அதைக்கேட்ட பிரம்ம ராட்சதன் அவனுடைய உறுதிப்பாட்டைக் கண்டு அவன் போய்வர அனுமதி தந்தது.
சண்டாளன் தன் வார்த்தை தவறாமல் மறுநாள் காலை வந்து பிரம்ம ராட்சதனிடம் “இன்று, இப்பொழுது என்னை உண்ணலாம்” என்றான். ஆச்சரியம் அடைந்த பிரம்ம ராட்சதன், “எவ்வளவு நாளாக இந்த ஏகாதசி விரதம் இருக்கிறாய்?” என்று கேட்க, “20 ஆண்டுகள்” என விடை பகர்ந்தான் சண்டாளன். அதைக் கேட்ட பிரம்ம ராட்சதன், ”நான் ஆதியில் பிராமணனாகத்தான் இருந்தேன். பூணூல் போடுவதற்கு முன்பு எந்த யாகத்திலும் பங்கு கொள்ளக் கூடாது என்று இருந்தும் திருட்டுத்தனமாக ஒரு யாகத்தில் கலந்து கொண்டேன். என் தந்தையார் பெயர் சோமசர்மா. என் பெயர் சர்மா. இப்பொழுது உன்னைச் சாப்பிடுவதற்கு பதிலாக ஒரு ஏகாதசி புண்ணியத்தை எனக்குத் தந்தால், இந்த நிலைமை நீங்கிவிடும்” என்று பிரம்ம ராட்சதன் கேட்டுக் கொண்டான். அவன் மேல் இரக்கம் கொண்ட சண்டாளன் ஒரு ஏகாதசி புண்ணியத்தில் இரண்டு மணி நேரப் பங்கை அவனுக்குத் தந்து அந்த இழிபிறவியிலிருந்து விடுதலை அடையச் செய்தான்.
இந்தச் சண்டாளன் மேற்கொண்ட தீர்த்த யாத்திரையின் போது தன் பழம்பிறப்பை உணர்ந்தான். துறவியாக ஆசிரம் வாழ்க்கை நடத்தும் பொழுது பிச்சை ஏற்றுக் கொண்டு வந்த உணவில் மண் விழுந்து விட்டது என்பதற்காக அந்த உணவைத் தூக்கி எறிந்து விட்டான். அதன் காரணமாகவே இப்பொழுது சண்டாளனாகப் பிறந்தான். அதன்பிறகு தீர்த்த யாத்திரை சென்று மன்னிப்புப் பெற்றான்.


