வரகுண பாண்டியனின் சிவபக்தி

வரகுண பாண்டியன் என்ற பாண்டிய மன்னன் மதுரை மாநகரில் இருந்தான். அவன் மகா சிவபக்தன். சிவபெருமானுடைய நினைவாகவே எப்போதும் இருப்பான். தன் மந்திரியோடு அவன் ஒரு சமயம் நல்ல கோடைக் காலத்தில் வந்து கொண்டிருந்தான். வழியில் பல மரங்கள் இருந்தன. வேப்ப மரங்களும் இருந்தன. அந்த மரங்களில் நிறையப் பழங்கள் இருந்தன. உடன் வந்த மந்திரியைப் பார்த்து, “இந்த மரங்களின் மேலே விதானம் அமை” என்று சொன்னான். மந்திரி, “என்ன மகாராஜா, இப்படி உத்தரவு ஆகிறதே!” என்று கேட்டார். அந்த மரத்தில் இருந்த வேப்பம் பழங்களைக் காட்டி, “அவை சிவலிங்கங்களாகத் தோன்றவில்லையா? அவை வெயிலில் காயலாமா?” என்று அரசன் கேட்டானாம். நமக்கு அந்த உணர்ச்சி விளங்காது. வேப்பம் பழம் என்றவுடன் கசப்பையே நினைப்போம். அவன் வேப்பம் பழங்களைச் சிவலிங்கமாகக் கண்டான். அவரவர்கள் கருத்தில் உள்ளதுதான் பார்வையில் தட்டுப் படும்.

மற்றொரு முறை மழைக் காலத்தில் அவன் ஒரு குளத்தங் கரை வழியாகப் போய்க் கொண்டிருந்தான். குளத்தில் தவளைகள் ஒலி எழுப்பிக் கொண்டிருந்தன. விகடக் கச்சேரியில் தவளையைப் போல விகடகவி ஒலிப்பதை நாம் கேட்கிறோம். நமக்குத் தவளையின் ஒலி விகடக் கச்சேரியைத்தான் நினைவூட்டும். ஆனால் வரகுண பாண்டியனுக்குத் தவளைகளின் ஒலியைக் கேட்டவுடன் வேறு எண்ணம் வந்தது. மந்திரியை அழைத்து, “கேழ்வரகையும், அரிசியையும் கொண்டு வந்து இந்தக் குளத்தில் கொட்டுங்கள்” என்று சொன்னான். “என்ன இப்படி உத்தரவாகிறது?” என்று கேட்டான், அமைச்சன். ”இங்கே உள்ள தவளைகள் ஹரஹர என்று முழக்கம் செய்வதை நீங்கள் கேட்கவில்லையா?” என்று கேட்டான் மன்னன். நமக்கு விகடக் கச்சேரி ஒலியாக நினைவுக்கு வந்தது, சிவபக்தி நிரம்பிய பாண்டியனுக்கு ஹரஹர ஒலியாகக் கேட்டது. வேப்பம் பழங்களைக் கண்டவுடன் சிவலிங்கத்தையும், தவளையின் குரலில் ஹரஹர சப்தத்தையும் உணர வேண்டுமென்றால் அதற்ற்ற உள்ளம் இருக்க வேண்டும். அவரவர்களது மனப்பாங்குக்கேற்பக் காட்சியும், கேள்வியும், கற்பனையும் தோன்றுகின்றன.

ஓம் நமசிவாய ஓம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *