21. சண்டேசுர நாயனார்

பொன்னி வளந்தரும் சோழ நாட்டில் சேய்ஞலூரில் வேதியர் குலத்தில் எச்சதத்தன் என்பானுக்கு மகனாகத் தோன்றியவர் விசாரசன்மர். வேதங்களை நன்கு பயின்று சிறிய வயதிலே பேரறிவுடையராகத் திகழ்ந்த இவர் தம்மூரிற் பசுக்களை மேய்க்கும் ஆயன் தன்னால் மேய்க்கப்படும் பசுவொன்றனைக் கடுமையாக அடித்ததைக் கண்டு பொறாது அவனை விலக்கி அப்பசுக்களைத் தாமே மேய்த்து வரலானார். எல்லாத் தெய்வநலங்களும் ஒருங்கே வாய்க்கப்பெற்று இறைவன் திருமஞ்சனம் ஆடுதற்குரிய பால் தயிர் நெய் முதலியன அளிக்கும் பசுவின் பெருமை யினையுணர்ந்து விசாரசன்மர் பசுக்களை அன்புடன் மேய்த்து வருவதால் பசுக்களும் நன்கு மேய்ந்து கன்று வாய் வைக்காமலே தாமே பால் சொரிவன வாயின. வீடுகளிலும் நிறையப் பாலைப் பொழிந்தன. அரனுக்குரிய ஆவின் பால் வீணாகலாகாது என எண்ணிய விசாரசன்மர் மண்ணியாற்றின் தென்கரையிலே ஆத்தி மரத்தடியில் மணலால் சிவலிங்கம் அமைத்துப் பசுக்கள் சொரியும் பாலை இறைவனுக்குத் திருமஞ்சனமாட்டிப் பூசனை செய்துவந்தார். இவர் இவ்வாறு செய்வதை ஊரவர் சிலர் இவருடைய தந்தை எச்சதத்தனுக்குச் சொன்னார்கள். அதனைக் கேட்ட தந்தை ஒருநாள் இவர் செய்கையை நேரிற்கண்டார். விசாரசன்மரைக் கோலாற் புடைத்தார். அவர் தம்மை மறந்து சிவபூசையில் ஈடுபட்டிருந்தார். பின்னர்த் தந்தை பாற்குடத்தைக் காலால் இடறினார். பால் சிந்தியது கண்ட விசாரசன்மர் அருகிற் கிடந்த கோலொன்றையெடுத்துத் தந்தையின் இரு கால்களையும் தடிந்தார். அக்கோலே மழுப்படையாக மாறித் தந்தையின் கால்களை வெட்டிய நிலையில் இறந்துபட்டார். அந்நிலையில் சிவபெருமான் உமையம்மையாருடன் எழுந்தருளித் தம் திருவடிகளில் வீழ்ந்து வணங்கிய சேய்ஞலூர்ப்பிள்ளையாரை அன்புடன் அணைத்து, நம்பொருட்டு நின்னைப் பெற்ற தந்தையை மழுவினால் எறிந்தாய். இனி உனக்கு அடுத்த தந்தை நாம்’ என்று அருள்செய்தார். “நாம் சூடும் மலர்களும் உடுக்கும் ஆடைகளும் உண்ட பரிசுலமும் உனக்கே யாகுக” என்று கூறிச் சண்டீசப்பதமும் தந்தருளினார். சண்டீசுவரபதத்தை யடைந்தமையால் இவர் சண்டேசுர நாயனார் எனப் போற்றப்பெறுகின்றார்.