
திருத்தொண்டர் வரலாறு
பேராசிரியர் க. வெள்ளைவாரணனார்
சுந்தரமூர்த்தி நாயனார் பாடியருளிய திருத்தொண்டத் தொகைத் திருப்பதிகத்திற் போற்றப் பெறும் சிவனடியார்களின் வரலாறுகளைத் திருநாரையூரிற் பொல்லாப் பிள்ளையார் அருள்பெற்ற நம்பியாண்டார் நம்பிகள் திருத்தொண்டர் திருவந்தாதி என்னும் நூலில் வகைப் படுத்திக் கூறினார். குன்றத்தூரில் தோன்றிச் சோழ மன்னனுக்கு அமைச்சராயிருந்த அருண்மொழித்தேவர் அவ்வரலாறுகளைத் திருத்தொண்டர் புராணமென்னும் வரலாற்றுக் காப்பியமாக விரித்துப் பக்திச் சுவை நிரம்பப் பாடியருளினார். சேக்கிழார் அருளிய இப் பெரியபுராணக் காப்பியத்தில் விரித்துரைக்கப் பெறு அடியார் வரலாறுகளைச் சுருக்கிக் கூறும் முறையில் கொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் திருத்தொண்டர் புராண சாரம் என்ற நூலை இயற்றியருளினார்,
மேற்கூறிய நூல்களாற் போற்றப் பெறும் திருத் தொண்டர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு நூற்றாண்டுகளில் பல்வேறு குலங்களில் தோன்றிச் சிவபெருமானிடத்தும் சிவனடியார்களிடத்தும் இடையறாப் பேரன்புடையவர்களாய்த் தத்தமக் கேற்ற தொழில்களைச் செய்து வாழ்ந்தவர்கள். இவர்களில் ஆதிசைவ அந்தணர் முதல் ஆதித்திராவிடர் வரை பல்வேறு குலத்தவர்களும் உள்ளார்கள்.
திருத்தொண்டர் வரலாறுகளை எல்லோரும் சுருக்கமாகவுணர்ந்து கொள்ளும் நோக்குடன் வெளியிடப்பெறும் இந்நூலைச் சைவவுலகம் வரவேற்றுப் பயன் பெறும் என நம்புகின்றேன்.