பேசாத நாள் – கி.வா. ஜகந்நாதன்
உள்ளக் கிழி
நள்ளிருள். யாரோ வீட்டுக்குள் திருட்டுத்தனமாக வந்திருக்கிறது போலத் தெரிகிறது. காலடிச் சத்தம் கேட்கிறது. காதை நெரித்துக்கொண்டு கேட்கிறோம். மூச்சை வேகமாக விடாமல் கேட்கிறோம். காலடியோசை தெளிவாகக் கேட்கிறது. அதைக் கேட்பதற்காக மூச்சை அடக்கிக் கொள்கிறோம். ஒன்றை உற்றுக் கவனிக்கும் போது மூச்சை அடக்குவது இயற்கையாக இருக்கிறது.
உற்றுக் கேட்கும்போது மூச்சை அடக்கிக் கேட்பது போலவே, எதையேனும் ஒன்றை உற்றுப் பார்க்கும்போதும் மூச்சை வேகமாக விடாமல் நிதானமாக விடுவதுதான் இயல்பு. மனத்தை ஒருமுகப்படுத்தும் போதெல்லாம் மூச்சு மெதுவாக இயங்கும். யோகம் செய்பவர்கள் மூச்சை அடக்கி மனத்தை நிறுத்த முயல்கிறார்கள். மூச்சின் ஓட்டத்துக்கும் மனத்துக்கும் தொடர்பு உண்டு.
இறைவனைத் தியானிக்கையில் மனம் ஒருமுகப்படும் போது மூச்சுக் காற்று மெல்ல மெல்ல ஒடுங்கி இயங்கும்.
அப்பர் சுவாமிகள் இறைவனைத் தியானித்து இன்புறும் வகையைச் சொல்கிறார்.
மனம் ஒரு பொருளைத் தியானிக்க வேண்டுமானால் அது ஓர் உருவத்தைத்தான் தியானிக்க முடியும். உருவம் இல்லாத ஒன்றைப் பற்றுவது என்பது மனத்தால் முடியாத காரியம். ஆதலால்தான் இறைவனுக்கு உருவங்கள் அமைந்திருக்கின்றன. இறைவனுடைய திரு வுருவத்தை உள்ளத்துக்குள்ளே தியானிப்பது எப்படி?
அப்பர் சுவாமிகள் தியானம் என்று சொல்லவில்லை உள்ளத்தில் இறைவனுடைய உருவத்தை எழுதவேண்டும் என்று சொல்கிறார். அதுவும் தியானந்தான். ஆனாலும் தியானத்தின் முதிர்ந்த நிலை அது. அதனைத் தாரணை என்று கூறுவர் யோகியர்.
கிழியில் ஒவ்வோர் அங்கமாக ஓவியன் எழுதிக் கொண்டு வருகிறான். ஓர் அங்கத்தை எழுதிவிட்டால் அது மறையாமல் நின்றுவிடுகிறது. அவ்வாறே ஒவ்வோர் அங்கமாக எழுதி எழுதி உருவம் முழுவதும் நிரம்புகிறது. ஓவியம் முழுவதும் ஒரு கணத்தில் எழுதி முடிவது அன்று. சிறிது சிறிதாக எழுதி முற்றுப்பெறச் செய்யவேண்டும்.
ஒன்றை எழுதிவிட்டால் மாறாமல் இருக்கும் கிழியில் எழுதுவதற்கே பல காலம் செல்லுமானால் ஒன்றை நினைத்தால் மறுகணமே மாறும் மனத்தில் ஓர் உருவத்தை எழுதுவது எவ்வளவு அருமை!
நடுத் தெருவில் ஒரு துணியைக் கட்டி அதில் ஓவியன் ஓவியம் தீட்டப் புகுகிறானென்று வைத்துக்கொள்வோம். காற்று அடிக்கும்போது ஓவியச் சீலை அசையும். அசைந்து கொண்டிருக்கிற கிழியில் எப்படிச் சித்திரத்தை எழுத முடியும்?
ஓவியந் தீட்டுபவர்கள் முதலில் கிழியை நன்றாக இறுக்கிக் கட்டி விறைப்பாக இருக்கச் செய்து அதன்மேல் எழுதுவார்கள்.
மனமோ காற்றால் அசையும் துணிபோலச் சலன முடையது. அதில் எதையாவது எழுத முடியுமா? அதன் சலனத்தைப் போக்கிவிட்டுப் பிறகே எழுதவேண்டும். மூச்சுக் காற்று வீசாதபடி செய்து மனமென்னுங் கிழியை விறைப்பாக வைத்துப் பிறகு உருவை எழுத வேண்டுமாம். அப்படி எழுதும்போது வேறு ஒரு கவனமும் இன்றி உற்று நோக்கி எழுதவேண்டும்.
உயிரா வணம் இருந்து உற்று நோக்கி
உள்ளக் கிழியின் உருஎழுதி.
[மூச்சு விடாதபடி இருந்து ஒருமைப்பாட்டுடன் பார்த்து உள்ள மென்னும் திரைச்சீலையில் உருவத்தை எழுதி,
உயிரா வணம் – மூச்சுவிடாத வண்ணம்; உயிர்த்தல் – மூச்சு விடுதல். உற்று நோக்குதல் – கூர்ந்து கவனித்தல். கிழி சித்திரம் எழுதும் துணி. உரு – இறைவன் திருவுருவத்தை.]
இப்படி எழுதுவதற்கு நெடுநாள் பழக்கம் வேண்டும். எழுதினது மாறாமல் முழு உருவும் எழுதி அகக்கண்ணால் காண்பது ஆனந்தம்.
“முகத்திற் கண்கொண்டு பார்க்கின்ற மூடர்காள்
அகத்திற் கண்கொண்டு பார்ப்பதே ஆனந்தம்”
என்று திருமூலர் கூறுகிறார்.
சிவபெருமான் உமாதேவியைத் தம் மனத்தகத்தே ஓவியமாக எழுதி அதனைப் பார்த்துப் பார்த்து இன்புறு வதாகக் குமரகுருபரர் பாடுகிறார்.
“……….எறிதரங்கம்
உடுக்கும் புவனம் கடந்துநின்ற
ஒருவன் திருவுள் ளத்தில் அழகு
ஒழுக எழுதிப் பார்த்திருக்கும்
உயிர்ஓ வியமே”
என்பது அவர் பாட்டு.
உள்ளமாகிய கிழியில் உருவத்தை எழுதிப் பார்க்கும் இன்பத்தை நுகர்ந்தவர் அப்பர் சுவாமிகள். தம் அநுபவத் தினால் சொல்லும் வார்த்தை இது.
உள்ளத்தே இறைவனுடைய திருவுருவத்தை, சலனமின்றி நிரந்தரமாகக் கிழியில் எழுதிய சித்திரத்தைப் போலப் பார்க்கிறவர்களுக்கு, உலக வாசனையே இராது. புறக் காட்சி சிறிதும் இராது. புறக் காட்சி உள்ளவர்களுக்கு அகக் காட்சி இல்லை. அகத்தே இந்த ஓவியத்தை உற்று நோக்குபவர்களுக்குத் தமக்கென்று ஒரு செயல் இல்லை. எல்லாவற்றையும் இறைவனிடத்தே அர்ப்பணம் செய்து இன்புறும் நிலை அது. ‘யான் தான்’ எனும் சொல் இரண்டு அங்கே இல்லை. ஆத்ம சமர்ப்பணம் செய்துவிட்டு நிற்கும் அந்த நிலையை அப்பர் சுவாமிகள் மேலே சொல்கிறார்.
உயிரா வணம்இருந்து உற்று நோக்கி
உள்ளக் கிழியின் உரு எழுதி,
உயிர்ஆ வணம்செய்திட்டு உன்கைத் தந்தால்
உணரப் படுவாரோ டொட்டி வாழ்தி.
உள்ளக் கிழியில் உரு எழுதிய பிறகு அந்த உருவத்தையே நோக்கி உண்முகமானவர்கள் தம்முடைய உயிரையே விலைக்கு விற்றுவிடுகிறார்களாம். ஆவணம் என்பது ஓலை எழுதிக்கொடுத்து விற்றுவிடுவதை ஆவணம் செய்தல் என்று குறிக்கிறார். அப்படி முறி யெழுதித் தம்மையே இறைவன் கையில் கொடுத்துவிட்டுத் தம்மை இழந்து நிற்கிறவர்கள் யாரோ அவர்களே மெய்ஞ் ஞான் நிலை பெற்றவர்கள்: உணர்வு உடையவர்கள்; உணர்பவர்கள். அத்தகையவர்களோடு இறைவனும் பிரி வின்றி ஒன்றி ஒட்டி வாழ்வான்.
பணத்தாலும் பலத்தாலும் சிறந்தவர்கள் இறை வனோடு ஓட்டி வாழும் வாழ்வை மனத்தாலும் நினைக்க
இயலாது. இன்பவாழ்வில் இணையற்று நிற்கும் அமரலோக வாசிகளெல்லாம் போற்ற நிற்பவன் இறைவன். அவர் களுக்குள் தலைவனாகிய இந்திரன் ஐராவதத்தில் ஏறிப் பவனி வருகிறான். இறைவன் அந்தத் தலைமைப் பதவியை அவனிடமிருந்து பெற்றுக்கொண்டு தானே அமரர் நாடு ஆளும் அதிபதியாய் ஐராவத மீதேறிச் செல்லலாம். அதை இறைவன் விரும்பவில்லை. அமரர் தம் நலத்தையே எண்ணுபவர் மன ஒருமைப்பாடு இல்லாதவர்கள். இறைவனுடைய உண்மை இயல்பை உணராதவர்கள். அவர்கள் ஆத்ம சமர்ப்பணம் செய்ய அறியாதவர்கள். இறைவனும் அவர்களும் ஒட்டி வாழ்வது இயலாது. இன்று தமக்குத் துன்பம் வந்தால் நீயே பெரியவன் என்பார்கள். நாளைத் துன்பம் நீங்கிவிட்டால் நானே பெரியவன், நானே பெரியவன் என்று செருக்குற்றிருப்பார்கள். அந்த இடத்தில் ஆண்டவன் தன் அதிகாரத்தைக் காட்டுவானேயன்றி அருளைக் காட்டமாட்டான்.
ஏழைக் குழந்தைகளாகிய மக்களிடந்தான் இறைவனுக்குக் கருணை பிறக்கும். அவர்களுக்காக அவன் இறங்கி வருவான். ஏழை மனிதர்கள் எத்தனை அறிவில் லாதவர்களாக இருந்தாலும் தன்னை எண்ணி ஏங்குபவர்கள் என்பதை அவன் அறிவான். மனிதர் கூட்டத்தில் தான் தன் உருவை உயிரா வண்ணம் இருந்து உள்ளக் கிழியில் எழுதும் அன்பர்கள் இருக்கிறார்கள் என்பதையும் அவன் உணர்வான். ஆதலால் தன்னுடைய அருள் விளையாடல்களை இந்த உலகத்திலே காட்டுவதுதான் அவனுடைய திருவுள்ளக்கிடக்கை. அவனுக்கு விளையாட்டிடம் பூமி. அவன் இரக்கத்துக்குரியவர்கள் மனிதர்கள். அவன் இங்கே வந்து திருவிளையாடல் புரியும் இடங்களே தலங்கள்.
இந்த நிலவுலகில் வந்து விளையாடல் புரிந்த கதை ஒன்றா இரண்டா? பாண்டி நாட்டில் மதுரையிலே சுந்தர
பாண்டியனாக வந்து அரசாண்டான். சோழ நாட்டிலே திருவாரூரில் அரசாண்டான். ஐராவதம் ஏறாமல் ஆனேற்றின் மேல் ஏறி வந்தான். அமரர் நாட்டை ஆளாமல் ஆரூரை ஆண்டான். அவன் ஆனை போன்றவன்; ஐராவதம் போன்றவன்; அருளாகிய மதம்
பொங்க அன்பர்களைக் காக்க எழுந்தருள்பவன்.
அயிரா வணம்ஏறாது ஆன்ஏறு ஏறி
அமரர்நாடு ஆளாதே ஆரூர் ஆண்ட
அயிரா வணமேஎன் அம்மானே.
[அயிராவணம் – ஐராவதம்; யானை. சிவபெருமான் ஏறும் யானைக்கும் அயிராவணம் என்ற பெயர் உண்டு, அதற்கு இரண் டாயிரம் கொம்புகள் உண்டென்பர்.]
கருணைமிக்க இறைவன் இவ்வுலகுக்கு எழுந்தருளி வந்தும் யாவரும் அவன் பெருமையை உணர்வதில்லை. அவர்கள் மேல் இறைவனுடைய அருட்பார்வை விழுவ தில்லை.தன்னை நினைந்து இரங்கும் குழந்தையினிடம் தாயின் அன்புப் பார்வை விழுவதைப் போல, இறைவன்
தன்னையே நம்பி வாழ்கிறவர்களிடம் தன் அருட்கண் பார்வையைச் செலுத்துவான். நல்லவர்கள் என்று சொல் கிறவர்கள் அவர்களே அவனுடைய அருட்கண் பார்வை யைப் பெறாதவர்கள் நல்லவர்கள் அல்லாதார். அவர்கள் இப்பிறவியைப் பெற்றும் பயன் பெறாதவர்கள். மனிதராக இருந்தும் மனிதர் அல்லாதாரே.
………………….நின்
அருட்கண்ணால் நோக்காதார் அல்லா தாரே.
[அல்லாதார்-நல்லவர் அல்லாதார்; மனிதர் அல்லாதார்.]
இறைவன் அமரரைப் பார்ப்பதுண்டு; ஆயினும் அருட் கண்ணால் நோக்குவதில்லை. அவர்கள் அல்லாதார். ஆதலின் அமரர்நாடு ஆள்வதிலே இறைவனுக்கு விருப்பம் இல்லை.
உயிரா வணம் இருந்து உற்று நோக்கி
உள்ளக் கிழியின் உரு எழுதி
உயிர்ஆ வணம்செய்திட்டு உன்கைத் தந்தால்
உணரப் படுவாரோடு ஒட்டி வாழ்தி
அயிரா வணம் ஏறாது ஆனேறு ஏறி
அமரர்நாடு ஆளாதே ஆரூர் ஆண்ட
அயரா வண்ணமேஎன் அம்மா னேஉன்
அருட்கண்ணால் நோக்காதார் அல்லா தாரே.
[உணரப்படுவார் – உணர்வார். படு என்ற சொல்லுக்குப் பொருள் இல்லை. போகப்பட்டகாலத்தில், ராமனாகப்பட்டவன் என்பவற்றிற் போலப் படு என்ற சொல் ஒரு பொருளுமின்றி வந்தது. ஒட்டி- வேறுபாடின்றி ஒன்றுபட்டு, வாழ்தி-வாழ் கிறாய். ஆனேறு -இடபம். அம்மானே-தலைவனே.]
“இறைவனை யார் ஒருமைப் பாட்டுடன் தியானித்துத் செய்கிறார்களோ அவர்களோடு இறைவன் இரண்டறக் கலந்துவிடுவான். அத்தகையவர்கள் இங்கே இருப்பதால் இவ்வுலகத்தில் ஆரூருக்கு எழுந்தருளினான். அவன் அருட் பார்வை பெறுபவரே நல்லோர்; ஏனையோர் அல்லாதார்’ என்று பாடினார் அப்பர்.
இது ஆறாம் திருமுறையில் 25-ஆம் பதிகத்தின் முதற் பாட்டு.