56. இடைக்காடன் பிணக்குத் தீர்த்த படலம்

சண்பகப் பாண்டியனுக்குப் பின் அவன் சந்ததியில் குலசேகர பாண்டியன் ஆட்சிக்கு வந்தான்; கல்வி கேள்விகளில் இலக்கண இலக்கியங்களில் புலமையும் நிறைவும் உடையவன் ஆதலின் அவனுக்குச் சங்கப் பலகை இடம் தந்தது. அதனால் அவனுக்குத் தலைமையும் கிடைத்தது.

கற்றவன் ஒருவன் அரசனாக இருக்கின்றான் என்று அறிந்த இடைக்காடன் என்ற புலவன் அவன் முன்பு கவிதை பாடிப் பாராட்டுதலைப் பெற விரும்பினான். அவன் கபிலரின் நண்பனாகவும் இருந்தான். மதிக்கத் தக்க புலவன் துதிக்கத் தக்க கவிதையைப் பாட அதன் சொற் சுவையையும் பொருட் சுவையையும் புலவர்கள் மதித்தனர்; புரவலனாக இருந்த அரசன் தன்னினும் கற்றவன் பாடிய கவிதையை மதித்தால் தன் மதிப்புக் குறைந்து விடும் என்பதால் அதனைப் பாராட்டவில்லை; பாராமுகமாக இருந்தான்; சுவைத்து அதன் அழகை முகபாவனையில் காட்டவில்லை. ஜீவனற்ற சடலமாக அங்கே அவன் அசைவற்று இருந்தான்.

கவிஞன் மனம் புண்பட்டது; மானம் பிடர் பிடித்து உந்தியது; தான் அடைந்த இடரை இறைவனிடம் கூறி முறையிட்டான். “என்கவிதை உன்னைப் பற்றித் துதித்துப் பாடிய பாடலாகும்” அதை மதிக்காமல் மதிகுல மன்னன் அப்பதவிக்கே இழுக்கு இழைத்தான்; இந்தப் பிழை பொறுக்கத் தக்கது அன்று; இறைவா நீ நியாயம் வழங்க வேண்டும்” என்று முறையிட்டான்.

“கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்பது பழமொழி. அறம் தழைக்காவிட்டால், நீதி நிலைக்காவிட்டால் ஒழுக்கம் சிறப்பிடம் பெறாவிட்டால்,

மன்னன் கோல் கோடினால் அங்கே தெய்வம் தங்கி நிலைத்து இருக்காது. தெய்வம் வாடல் கொண்டு கூடல் நகரை விட்டு வெளியேறியது. கோயில் சிவலிங்கம்; இடம் பெயர்ந்து விட்டது. மதுரை நகரை விட்டு வெளியேறி விட்டது. திருக்கோயிலுக்கு நேர் வடக்கே வைகையாற்றின் தெற்குப் பகுதியில் ஒரு புது ஆலயம் எழுப்பி அங்குத் தானும் மீனாட்சி அம்மையும் குடி பெயர்ந்தனர். சங்கப் புலவர்களும் உடன் சென்று அங்குச் சங்கத்தை மாற்றிக் கொண்டனர்.

வழிபட வந்தவர்கள் பழைய கோயிலுக்குள் இருந்த சிவலிங்கத்தைக் காணாமல் திகைப்புற்றனர். செய்தி அறிந்த அரசன் உய்தி அடைவது எப்படி என அலமரல் உற்றான். தான் செய்த தவற்றை உணர்ந்து இடைக்காடனை மதிக்காததால் தான் விடையேறு உகந்தோன் நடை காட்டினார் என்பதை அறிந்தான். புதுக்கோயில் இருந்த இடத்துக்கு விரைந்து ஓடிச் சென்று அங்குக் குடிகொண்டிருந்த தெய்வக் கோமகனைக் கண்டு தரிசித்துப் பாடல்கள் பல பாடி வழிபட்டுத் தன் வழிக்கு வர அழைத்தான்.

இத்தலம் உத்தர ஆலவாய் என்று இனிப் புதுப்பெயர் பெறும்; கடம்ப வனத்திலும் உறைவோம்; இப்புதிய தலத்திலும் தங்குவோம்; கவலற்க; அவலம் நீங்குக இடைக்காடன் இடம் பெறாத மதுரையில் எனக்கு என்ன வேலை? அதனால் தான் வந்துவிட்டேன்; நீ கற்றவனாக இருக்கலாம்; அதனால் நீ உற்ற பெருமையால் மற்றொரு கவிஞனை மதிக்காதது தவறு; இடைக்காடன் உன்னோடு நேரில் மோத முடியாது; புலவர்கள் எல்லாரும் நக்கீரனாக இருக்க முடியாது” என்றார்.

“அவர்கள் பால் நீ இரக்கம் காட்டமுடியவில்லை; அதனால் ஏற்பட்ட அந்தப் பிணக்கு தீர்ந்தது; இனி இடைக்காரரிடம் மன்னிப்புப் பெறுக” என்று சொல்லி அனுப்பினார். குலேசபாண்டியனும் நடந்ததை லேசாக எடுத்துக் கொண்டு பூவும் சந்தனமும் கொண்டு புலவரின் விலாசம் அறிந்து அவரைச் சந்தித்து மதித்துப் பொருளும் பொன்னும் தந்து அவரைப் பாராட்டி அவரோடு நல்லுறவு கொண்டான். சங்கம் மறுபடியும் மதுரை வந்து அடைந்தது.