
கி. வா. ஜகந்நாதன்
கந்தர் அலங்காரச் சொற்பொழிவு வரிசையில் இது பதினோராவது புத்தகம். இதில் ஐம்பத்தைந்தாவது பாடல் முதல் ஐம்பத்தொன்பதாவது பாடல் வரையில் உள்ள ஐந்து பாடல்களுக்குரிய விளக்கம் இருக்கிறது.
ஓங்கார ஒளி என்னும் முதற் சொற்பொழிவில் அருண கிரிநாதப் பெருமான், “இவ்வாறு செய்யாமல் மக்கள் வீணாக வாழ்கிறார்களே! யமதூதர்கள் வந்தால் என்ன செய்வார்கள்!” என்று இரங்கும் பாட்டுக்குரிய விளக்கம் இருக் கிறது. இவை செய்யவில்லையே என்று இரங்கும் வாயிலாக, இவை செய்தால் யம பயத்தைப் போக்கிக் கொள்ளலாம் என்பதைப் புலப்படுத்துகிறார். ஓங்காரம் ஒரு மந்திரம்; அது ஒலிவடிவானது. அதைப் பற்றிப் பல பெரியோர்கள் சொல்லி யிருக்கிறார்கள். இந்தப் பாட்டில் அருணகிரிநாதர் ஓங்காரத்துக்கு ஒளியும் உண்டு என்று சொல்லுகிறார். அநுபூதி மானாகிய அவர் கூறுவது கற்பனை அன்று. ஓங்காரம் அநுபவ நிலையில் ஒலியாகவும் ஒளியாகவும் இருந்து பொறிகள் பராமுகப் படாமல் ஒடுங்கி நிற்க உதவி செய்யும் என்ற இரகசியத்தை இந்தப் பாடல் தெரிவிக்கின்றது.